×

ஆசிய நாடுகளில் காற்று மாசுபாட்டால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு: இந்தியாவில் 12 லட்சம் பேர் பாதிப்பு, 9.3 லட்சம் பேர் இறப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: ஆசிய நாடுகளில் அதிகரிக்கும் காற்றுமாசு காரணமாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் புற்றுநோய் பாதித்த 12 லட்சம் பேர்களில் 9.3 லட்சம் பேர் இறந்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வௌியாகி உள்ளது. தி லான்செட் ரீஜினல் ஹெல்த் தென்கிழக்கு ஆசிய இதழில் வௌியாகியுள்ள கட்டுரையில், “ஆசியாவில் கடந்த 2019ல் புதிதாக புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் சீனா, இந்தியா, ஜப்பான் நாடுகள் முதல் 3 இடத்தில் உள்ளன. இந்த நாடுகளில் 94 லட்சம் பாதிப்புகள், 56 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளன. சீனாவில் 48 லட்சம் புதிய பாதிப்புகள், 27 லட்சம் உயிரிழப்புகள் என முதலிடத்திலும், இந்தியா 12 லட்சம் புதிய பாதிப்புகள், 9.3 லட்சம் உயிரிழப்புகள் என 2ம் இடத்திலும், ஜப்பான் 9 லட்சம் புதிய பாதிப்புகள், 4.4 லட்சம் இறப்புகள் என 3ம் இடத்திலும் உள்ளது.

ஆசிய நாடுகளில் புதிதாக புற்றுநோய் பாதித்தவர்களில் அதிகளவில் மூச்சுக்குழாய், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். அதன்படி மூச்சுக்குழாய், நுரையீரல் புற்றுநோய் பாதித்தவர்கள் 13 லட்சம் பேர். இவர்களில் 12 லட்சம் பேர் பலியாகி விட்டனர். இந்த பாதிப்பு ஆண்களிடம் அதிகளவில் பதிவாகியுள்ளது. ஆசிய நாடுகளில் பெண்களை பொறுத்தவரை கர்ப்பப்பை வாய் புற்றுநோய், முதல் 5 இடங்களில் அல்லது 2வது இடத்தில் காணப்படுகிறது. ஒட்டுமொத்தமாக கண்டம் மற்றும் நாடுகளில் மார்பகம், பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய், வயிறு மற்றும் மெலோனா அல்லாத தோல் புற்றுநோய், ஆகியவை 2019ம் ஆண்டில் அடிக்கடி ஏற்படும் முதல் 5 வகை புற்றுநோய்களாக கண்டறியப்பட்டுள்ளன. ஒருசில நாடுகளில் லுகேமியா, புரோஸ்டேட், கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய்கள் பதிவாகி உள்ளன. புற்றுநோய் ஏற்படுவதற்கான 34 ஆபத்து காரணிகளில் புகை பிடித்தல் மது அருந்துதல், சுற்றுப்புற மாசுபாடு ஆகியவை அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக ஆசிய நாடுகளில் புற்றுநோய் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆசிய நாடுகளில் காற்று மாசுபாட்டால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு: இந்தியாவில் 12 லட்சம் பேர் பாதிப்பு, 9.3 லட்சம் பேர் இறப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,New Delhi ,Asian ,Lancet Regional Health Southeast ,
× RELATED பொய், வெறுப்பின் ஆதரவாளர்களை...